Saturday 16 November 2013

ராஜயோகம்

சரியானபடி மனம் என்பதை நாம் உணர வேண்டும். உயிரினுடைய படர்க்கைநிலை மனம் என்று அடிக்கடி சொல்கின்றோம். உயிர்த்துகளில் ஆதியெனும் பிரம்மம் அறிவாக ஒடுங்கி உள்ளது. அது உயிர்த்துகளிலிருந்து எழும் அலை மூலம் படர்க்கை நிலையில் மனமாக இயங்குகின்றது. உயிரினுடைய அலை இயக்கம் ஒரு அளவில் வந்து கொண்டே இருக்கிறது; ஒரு அளவில் போய்க்கொண்டேயும் இருக்கிறது. அது உயிர்த்துகளிலே தோன்றுகிறது. விரிந்து பரவி பிரம்மத்திலே லயமாகிக் கொண்டே இருக்கிறது. அலை புறப்படுகிறது. அது பரவி விரிந்து பரவெளியில் ஒடுங்கிப் போகின்றது. இவ்வாறு புறப்படுவதற்கும் ஒடுங்குவதற்கும் மத்தியிலே இருக்கக்கூடிய ஒரு இயக்கம்தான் அழுத்தமாக, அவ்வழுத்தம் ஒன்றோடு ஒன்று மோதும்போது ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக, அதை உணர்ந்துகொள்ளக்கூடிய 'மனமாக' ஆறுவகையிலே இயங்கக்கூடிய உனனதமான வியத்தகு ஆற்றலாக உள்ளது. ஆகவே "மனம்" ஒரு நிரந்தரமான (Permanent) பொருள் இல்லை. "மனம்" என்பதை எடுத்துக் கொண்டோமானால் அது உயிரிலிருந்து வந்துகொண்டே இருக்கும் அலை இயக்கம் தான். மனம் நிற்க வேண்டுமென நினைத்தால் மட்டும் நின்றுவிடாது. பயிற்சியின் மூலமாக மனத்தைத் திருப்பி வளப்படுத்தி, முறைப்படுத்தி நம் விருப்பம்போல் எந்தெந்த முறையிலே செயல்படுத்த முடியுமோ அப்படிச் செய்ய வேண்டும். அதற்கான உளப்பயிற்சியைத்தான் "மனவளக்கலை" என்றும் "அகத்தவம்" என்றும், "அகநோக்குப்பயிற்சி" என்றும், "குண்டலினியோகம்" என்றும் "ராஜயோகம்" என்றும் பலவாறாக சொல்கிறோம்.

No comments:

Post a Comment