Tuesday 26 November 2013

பூஜை அறைலே சுவாமி முன்னாலே வையுங்கோ”

உடனே உங்க ஊருக்கு போய் உங்கள் பூஜை அறைலே சுவாமி முன்னாலே வையுங்கோ”
மார்ச் மாதம். மந்தைவெளியில் ஒரு சத்திரத்தில் என்னுடைய தகப்பனாருடைய சதாபிஷேகம் !! இரண்டு நாள் முன்னால் நான் என் சித்தப்பா ,சித்தியுடன் பெரியவாளை தரிசிக்க பூ, பழம் பத்திரிகையுடன் காலை ஏழு மணிக்கு புறப்பட்டு காஞ்சிபுரம் போனோம் .கூட்டமான கூட்டம் . நாங்கள் வரிசையில் நின்று எங்களுடைய முறைக்காக காத்து கொண்டிருந்தோம்.

பெரியவாள் பூஜையை முடித்துக்கொண்டு அந்த மரத்தடியில் வந்து அமர்ந்துகொண்டார். மணி ஒன்று . சித்தப்பவும் சித்தியும் பெரிய தாம்பாளத்தில் எல்லா பழங்கள் ,பூ பத்திரிகையுடன் நான் பினனால் தொடர ,நாங்கள் பெரியவாள் முன்னால்.

” நான் கொடுங்கல்லூர் அப்பு நாராயணன் பையன் , என் அண்ணாவுக்கு சதாபிஷேகம் ,பெரியவாள்,ஆசிர்வதிக்கணும் ” — இது என் 68 வயது சித்தப்பா

“1939 லே உங்க ஆத்திலே எனக்கு உங்க அப்பா பாத பூஜை பண்ணி இருக்கார் .உயரமா ,இடுப்பிலே சாவி கொத்து மாட்டிண்டு ராஜா மாதிரி நடப்பார் ,உனக்கு ஞாபகம் இருக்கா ? “

எனக்கு உடம்பெல்லாம் வியர்த்து விட்டது !! எறக்குறைய 47 வருஷத்துக்கு முன்னால் நடந்த விஷயத்தை நேத்து நடந்தது போல சொல்லறாரே !!

நான் என் தாத்தாவை பார்த்ததுகூட கிடையாது .ஆத்துலே ஒரு போட்டோ கூட இல்லை . காரணம் போட்டோ எடுத்தால் ஆயுசு குறையுமாம் !!! அந்த காலத்திலே அப்படி ஒரு நம்பிக்கை .

சித்தப்பா பதில் சொல்லறதுக்கு முன்னாடியே பெரியவா. ” என்னைக்கி சதாபிஷேகம் ? “

“இந்தா, இந்த பூவை முஹுர்த்த வேளையிலே அண்ணாவுக்கும் மன்னிக்கும் அபிஷேகமா போடு, இந்தா பிரசாதம் இதை இட்டுக்க சொல்லி குடு “

பத்திரிகையை காட்ட சொல்லி அதன் மேல் பூவையும் பிரசாதமும் கொடுத்தார் . ஜ்வலிக்கிற அவருடைய கண்களை என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் என் கண்களில் நீர் பனித்தது.

நல்ல வெயில் நேரம் .பகல் இரண்டுமணி.
” நாம சாப்பிட்டுவிட்டு ஆத்துக்கு போறதுக்கு எப்படியும் ஏழு மணியாவது ஆகும் “
பெரியவ தந்த இந்த பூ சூட்டுக்கு வாடாமல் இருக்கணுமே – இது என் கவலை.

அருகில் இருந்த குழாய்லே தண்ணி வந்தா தண்ணி தெளிக்க்கலாமே என்று நான் அங்கே போன போது ஒரு வயதான மாமி ஓடிவந்து, ” அதுலே தண்ணி தெளிக்காதேங்கோ , இனிமே நீங்கள் இங்கே இருக்கபடாது. உடனே உங்க ஊருக்கு போய் உங்கள் பூஜை அறைலே சுவாமி முன்னாலே வையுங்கோ .அப்புறமா பெரியவா சொன்னதை போல் செய்யுங்கோ “

சாயங்காலம் வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலை சுவாமி அறையில் பெரியவாள் தந்த பொக்கிஷங்களை கொண்டு வைத்தோம். சதாபிஷேகதுக்கு மேலே செய்ய வேண்டிய காரியங்கள் தொடர்ந்தது .மூன்றாவது நாள் சதாபிஷேகம் முகூர்த்தத்திற்கு முன்னால் அடையார் வீட்டில் இருந்த பெரியவாள் அனுக்ரஹித பூ, பிரசாதம் இவைகளை எடுத்துக்கொண்டு சத்திரத்திற்கு போய் பார்த்தால் என்ன ஆச்சர்யம் !

இந்த கொதிக்கிற சென்னை வெயிலும் எப்பவும் சூடாகவே இருக்கிற பூஜை அறையும் பிரசாத பூக்களை ஒன்றும் செய்யமுடியவில்லை . வாடா மலர்களால் என் பெற்றோர்களுக்கு என் சகோதரர் மற்றும் சித்தப்பா சித்தியுடன் அபிஷேகம் செய்தோம் .

இதை இன்னிக்கி நினைத்தாலும் பெரியவாளை நினைத்து என் கண்கள் பனிக்கிறது .

இதுதான் முதலும் கடைசியுமாக நான் பெரியவாளை பார்க்கிறது .ஆனால் இன்னைக்கும என் பெற்றோர்களின் போட்டோவை பார்க்குபோது பெரியவாளின் முகம்தான் முதலில் தெரிகிறது.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !!!!! ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !!!!! ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !!!!!

No comments:

Post a Comment