திருமண்ணும் திருநீறும் சொல்லும் தத்துவம் ஒன்றுதான்..!
தமிழில் பல அருமையான சிற்றிலக்கிய வகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று, குறம்.
ஒருவருடைய கையையோ, உடலையோ, முகத்தையோ பார்த்து, அவர்களுடைய எதிர்காலத்தில்
என்ன நடக்கும் என்று கணித்துச் சொல்லுவது, அதாவது, குறி சொல்லுவதுதான்
‘குறம்’ என்று அழைக்கப்படுகிறது.குறிப்பாக, இறைவனை மணக்கவிருக்கும்ஒரு
பெண்னைச் சந்திக்கும் ஒரு குறத்தி அந்த இறைவனின் பெருமைகளைப் பாடி,
‘இப்படிப்பட்ட கண வன் உனக்கு வருவான்’ என்று சொல்லி அவளை மகிழச் செய்வாள்,
இந்த வகையில் அமைந்த சுவாரஸ்யமான கதைப் பாடல் இலக்கியங்கள் ஏராளம்.
இதற்குச் சிறந்த உதாரணம், குமர குருபரர் எழுதிய ‘மீனாட்சியம்மை குறம்’.
மதுரை மீனாட்சிக்கு மாப்பிள்ளையாக, சுந்தரேஸ்வரர் வரவிருக்கி றார். அதைப்
பற்றி மீனாட்சியம்மைக்கு எடுத்துச் சொல்கிறாள் குறத்தி. இந்தக் குறத்தி
பிறந்து வளர்ந்ததெல்லாம்பொதிகை மலையில். ஊர்ப் பெருமை எல்லாருக்கும்
இருக்கும்தானே? குறி சொல்வதற்கு முன்னால், அவள் தங்களுடைய மலையின் பெருமையை
விவரிப்பதாகக் குமரகுருபரர் எழுதியிருக்கும்ஓர் அருமையான பாடல்:
சிங்கமும் வெம் களிறும் உடன் விளையாடும் ஒருபால்,
சினப் புலியும் மடப் பிணையும் திளைத்திடும் அங்கு ஒருபால்,
வெம் கரடி மரயினொடும் விளையாடும் ஒருபால்,
விட அரவும் மட மயிலும் விருந்து அயரும் ஒருபால்,
அங்கண் அமர் நிலம் கவிக்கும் வெண் கவிகை நிழல்கீழ்
அம் பொன் முடி சூடும் எங்கள் அபிடேகவல்லி
செம் கமலப் பாதம் பரவும் கும்ப முனி பயிலும்
தென் பொதிய மலை காண் மற்று எங்கள் மலை அம்மே!
அம்மையே, பொதுவாக, சிங்கமும் யானையும் ஒன்றுக்கொன்று விரோதிகள், புலியைப்
பார்த்தால் மான் பயந்து ஓடும், கரடியைப் பார்த்தால் மரை என்கிற ஒரு வகை
மான் நடுங்கும், பாம்பும் மயிலும் எப்போதும் சண்டையிடுகிறவை.ஆனால்,
எங்களுடைய பொதிகை மலையில் மட்டும் இந்த விரோதங்களுக்கு இடமே இல்லை! அங்கே
ஒருபக்கம் சிங்கமும் யானையும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும். இன்னொரு
பக்கம் புலியும் மானும் ஆனந்தமாகத் திளைத்து ஆடும். வேறொரு பக்கம் கரடியும்
மரையும் ஒன்றாக ஆட்டம் போடும். விஷப் பாம்பும் மயிலும் ஒன்றாக விருந்து
சாப்பிட்டு விட்டுக் களைத்து அமர்ந்திருக்கும்!
இப்படி மிகத் தீவிரமான
எதிரிகளைக்கூட, நண்பர்களாக மாற்றிவிடுகிற சிறப்பைக் கொண்டது எங்களுடைய
பொதிகை மலை. ஏன் தெரியுமா? உலகையெல்லாம் காக்கும் வெண்கொற்றக்
குடையின்கீழ், அழகிய தங்கக் கிரீடத்தைச் சூடிய அபிஷேகவல்லி இங்கே
எழுந்தருளியிருக்கிறாள். சிவந்த தாமரை மலர்களைப்போன்ற அவளுடைய பாதம் பட்ட
இந்த மலையில், அன்பைத் தவிர வேறெதற்கும் இடம் இல்லை, எல்லாரும்
எல்லாருக்கும் நண்பர்கள்தான், எல்லாரும் உறவினர்கள்தான்!
அது
மட்டுமில்லை, கும்பத்திலிருந்து பிறந்த, ‘கும்ப முனி’ என்று அழைக்கப்படுகிற
அகத்திய முனிவரும் இந்தப் பொதிகை மலையில்தான் வாழ்ந் தார். தமிழ் வளர்த்த
அந்தப் பெருமானின் ஆசிகளும், எங்களை என்றைக்கும் மகிழ்ச்சியாகவே
வாழவைக்கின்றன! இப்படிப்பட்ட சிறப்பைக் கொண்ட தென்பொதிகை மலையிலிருந்து
வந்திருக்கும் நான், உன்னுடைய எதிர்காலத்தைப்பற்றிச் சொல்கிறேன் கேட்பாயாக!
எல்லா மதங்களும் எல்லாக் கடவுளர்களும் அன்பைதான் போதிக்கிறார்கள். ஆனால்,
பக்தர்களுக்கிடையே கருத்து வேறுபாடு எப்போதும் உண்டு இதற்குச் சிறந்த
உதாரணம், சைவம், வைணவம் ஆகியவற்றை இருவேறுபட்ட அம்சங்களாக
எடுத்துக்கொண்டுபிடிவாதமாகச் சண்டை போடுகிறவர்கள்தான்.
நமக்குத்
தெரிந்து சிவனை வணங்க மாட்டேன் என்று சொல்லும் வைணவர்கள் பலர் உண்டு.
திருமால் ஆலயங்களைப் புறக்கணிக்கும் சிவ பக்தர் களும் உண்டு. இந்தப்
பாகுபாட்டைக் கேலி செய்யும்விதமாக,‘அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர்
வாயிலே மண்ணு’ என்று ஒரு சொலவடைகூட இருக்கிறது. சிவனும் திருமாலும்
சேர்ந்து தோன்றும் பல கதைகள் உள்ளன, கடவுள் தன்னுடைய பக்தர்களில் பேதம்
பார்ப்பதில்லை என்று பல பெரியவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்,
சைவக் கோயில்கள் பலவற்றில் பெருமாளும் வைணவக் கோயில்களில் சிவனும்
எழுந்தருளியிருக்கிறார்கள், ஆனால், எத்தனை பேர் இதை மனத்தளவில்
ஏற்றுக்கொள்கிறார்கள்?
இதுகுறித்து, கவிஞர் வாலி தன்னுடைய சமீபத்திய
நூல் ஒன்றில் இப்படி எழுதுகிறார்: ‘ஆனை துரத்தினும் ஆனைக்கா புகேன்’ என்று
சொல்லும் வைணவர்கள் வழி வந்த நான், சின்ன வயதில் இருந்தே சைவர் வழிபடும்
அம்பிகையிடமும் ஆறுமுகனிடமும் அடைக்கலமானேன். அசல் ஐயங்கார் குடும்பத்தில்
பிறந்த நான், முருகன் விபூதியையும் அம்மன் குங்குமத் தையும்தான் இன்றும்
நெற்றியில் இட்டுக்கொள்கிறேன். திருமண்ணும் திருநீறும் ஒரே தத்துவத்தைதான்
சொல்கின்றன!’ சொலவடைத் தமிழில் பாமரர்களும் உரைநடைத் தமிழில் வாலியும்
எழுதிய இதே விஷயத்தை, அன்றைக்குக் கவிதைத் தமிழில் ஓர் ஆழ்வாரும்
சொல்லியிருக்கிறார், தெரியுமா?
சில புத்தகங்களை ‘டூ இன் ஒன்’
வடிவத்தில் வெளியிடுவார்கள். முதல் பக்கத்திலிருந்து படித்தால் ஒரு கதை,
அப்படியே திருப்பிக் கடைசிப் பக்கத் திலிருந்து படித்தால் இன்னொரு கதை.
வாசகருக்கு ஒரே புத்தகத்தில் இரண்டு புத்தகங்களைப் படித்த திருப்தி
கிடைக்கும்.அந்தவிதத்தில், பொய்கையாழ்வார் அருளிச்செய்த இந்தப் பாடலும் ‘டூ
இன் ஒன்’தான். ஒரே பாடலில் சிவன், திருமால் என இரண்டு கடவுள்களின் புகழ்
பாடப்படுகிறது, அதோடு ‘த்ரீ இன் ஒன்’னாக, அவர்கள் இருவரும் ஒன்றே எனும்
தத்துவமும் விளக்கப்படுகிறது.
‘அரன், நாரணன் நாமம்; ஆன்விடை, புள் ஊர்தி;
உரை நூல், மறை; உறையும் கோயில் வரை,நீர்;
கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல், நேமி;
உருவம் எரி, கார்; மேனி ஒன்று.’
முதலில், இரு கடவுள்களின் பெயர்கள்:
சிவனுக்கு அரன், திருமாலுக்கு நாரணன்.
அடுத்து, அவர்களுடைய வாகனங்கள்,
சிவனுக்கு எருது, திருமாலுக்குப் புள் / பறவை, அதாவது, கருடன். அவர்கள்
இருவரும் நமக்காக உரைத்தவை, சிவன் தந்தது ஆகம நூல், திருமால் அருளியது மறை
நூல். அவர்கள் இருவரும் வாழுகின்ற இடங்கள், சிவன் வாழ்வது வரை /மலை,
அதாவது, கயிலாயம். திருமால் வாழ்வது நீர், அதாவது பாற்கடல். அவர்கள்
இருவருடைய வேலை? சிவனுடைய வேலை அழிப்பது, திருமாலுடைய வேலை காப்பது.
அவர்கள் கையில் என்ன இருக்கும்? சிவன் கையில் வேல் இருக்கும். திருமால்
கையில் சக்கரம் இருக்கும். அவர்களுடைய உருவம் எப்படிப்பட்டது? சிவனுடைய
உருவம் எரி, அதாவது, நெருப்பு வடிவானது. திருமாலின் உருவம் கார். அதாவது,
மேகத்தைப் போன்றது.
இப்படிப் பெயர், வாகனம், உரை, வாழும் இடம், வேலை,
ஆயுதம், உருவம் என்று பல விதங்களில் இவர்கள் வேறுபட்டாலும், அவர்களுடைய
மேனி ஒன்றுதான். அவர்களை இருவேறாகப் பேதம் பார்க்காதீர்கள். ஒருவரைப்
புறக்கணித்து இன்னொருவரை வணங்குவதுதான் உயர்வு என்று நினைக்காதீர்கள்! ஊர்
சிதம்பரம், மாதம் மார்கழி, திருவாதிரைத் திருவிழா, நடராஜரின் தேர் வலம்.
இறைவனின் திருக்கோலத்தைப்பார்ப்பதற்காக ஊரே திரண்டிருந்தபோது, ஒரு பிரச்னை,
நடராஜர் எழுந்தருளியிருந்த தேர் நகர மறுத்தது. பக்தர்கள் பதறிப்போனார்கள்,
ஏதேனும் தெய்வ குற்றமாகிவிட்டதா? பூஜையில் தவறா? தேரை இழுத்தவர்கள்
சரியில்லையா? இப்போது என்ன செய்வது?
யார் யாரோ இழுத்துப் பார்த்தும்
அந்தத் தேர் அரை அடிகூட நகரவில்லை. மக்கள் ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்தபடி திகைத்து நின்றார்கள். அப்போது, வானிலிருந்து ஓர் அசரீரி
கேட்டது, ‘‘சேந்தா, தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக!’’ ‘‘சேந்தா’’ என்று
இறைவனால் உரிமையோடு அழைக்கப்பட்டவருடைய முழுப் பெயர் சேந்தனார். பெரும்
பக்தர், அருமையான புலவரும்கூட. நடராஜரே கேட்டபிறகு மறுக்கமுடியுமா?‘‘மன்னுக
தில்லை, வளர்க நம் பக்தர்கள்’’ என்று தொடங்கி, அற்புதத் தமிழில் ‘திருப்
பல்லாண்டு’ பாடினார், சேந்தனார். மறுகணம், அந்தத் தேர் நகரத் தொடங்கியது.
யாரும் வடம் பிடித்து இழுக்காமலே ஊரை வலம் வந்து தன்னுடைய இருப்பிடம்
சேர்ந்தது. சேந்தனார் பாடிய ‘திருப் பல்லாண்டு’ இன்றைக்கும் சைவத்
திருமுறைகளில் ஒன்றாக வைத்துப் போற்றப்படுகிறது, அற்புதமான பாடல்களைக்
கொண்ட இந்தச் சிறு நூலின் முதல் பாடல், நகராத தேரை நகர்த்துவதற்காகஆண்டவனே
கேட்டுப் பெற்றது:
மன்னுக தில்லை, வளர்க நம் பக்தர்கள்,
வஞ்சகர் போய் அகல,
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து,
புவனி எல்லாம் விளங்க,
அன்ன நடை மடவாள் உமை கோன்,
அடியோமுக்கு அருள் புரிந்து,
பின்னைப் பிறவி அறுக்க நெறி தந்த பித்தர்க்குப்
பல்லாண்டு கூறுதுமே!
‘பல்லாண்டு’ என்றால், ஒருவரைப் ‘பல ஆண்டுகள் நிறைவாகவும்
ஆரோக்கியமாகவும்வாழ்க’ என்று வாழ்த்துவதைக் குறிப்பிடும் சொல். வைண வத்தில்
இது மிகவும் பிரபலமான ஒரு பாடல் முறை. உதாரணமாக, பெரியாழ்வார் அருளிச்
செய்த இந்த வரிகள்:
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா, உன்
சேவடிச் செவ்வித் திருக்காப்பு.
இறைவா, நீ பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்க! பல கோடி
நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க! மல்லர்களை அடக்கிய பல மான தோள்களை உடைய
மணிவண்ணா, உன் சிவந்த திருவடியின் அழகு என்றைக்கும் குறைவில்லாதபடி
காப்பாற்றப்படட்டும்! கொஞ்சம் பொறுங்கள், எங்கேயோ இடிக்கிறது! வழக்கமாக
எல்லாரும் இறைவன் முன்னால் வணங்கி நின்று நீண்ட வாழ்வுக்காக வேண்டுவார்கள்.
ஆனால், இங்கே சேந்தனாரும் பெரியாழ்வாரும் இறைவனையே ‘பல ஆண்டுகள் வாழ்க’
என்று வாழ்த்துகிறார்களே. இது சரியா? இறைவனுடைய பிள்ளைகளாகிய நாம், அவனை
வாழ்த்தலாமா? தப்பில்லையோ?
பக்தியின் முதிர்ச்சி நிலைகளில் ஒன்றுதான்
இது. கடவுள்மேல் அளவற்ற பாசம் ஏற்பட்டுவிட்டால், இந்த உலகத்தில் அவருக்கு
ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடுமோ என்கிற அச்சம் (அர்த்தமற்றதாக இருப்பினும்)
ஏற்படுகிறது, அப்படி எதுவும் நடக்காமல் அவர் பல்லாண்டு வாழட்டும் என்று
உருகிப் பாடத் தோன்றுகிறது! சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டில், இறைவனை
மட்டுமல்ல, அவன் எழுந்தருளியிருக்கும் சிதம்பரம், அங்குள்ள
பக்தர்களையெல்லாம்கூட வாழ்த்துகிறார்.‘நமக்கு எதிராக வஞ்சகம் செய்கிறவர்கள்
இங்கிருந்து நீங்கட்டும்’ என்கிறார். சிதம்பரம் கோயிலுக்குத் தங்கத்தால்
செய்த கூரை உண்டு. அதைக் குறிப்பிடும்வகையில், ‘பொன்னால் செய்த மண்டபத்தில்
புகுந்து, எல்லா உலகங்களும் விளங்க அருள் புரிபவன்’ என்று சிவபெருமானைப்
போற்றுகிறார் சேந்தனார். ‘அன்னம் போல் நடக்கும் உமையம்மையின் தலைவன்,
பித்தன் என்று போற்றப்படும் அந்த இறைவன், எம்மைப்போன்ற அடியார்களுக்கு
அருள் புரியவேண்டும், எங்களுடைய பிறவிப் பிணியை அகற்றவேண்டும்.’
இதெல்லாம் இன்றைக்கு, நாளைக்கு அல்ல, என்றென்றும் தொடர்ந்து நடக்கவேண்டும்,
அதற்காக, நாம் அந்த இறைவனை வாழ்த்திப் பல்லாண்டு பாடுவோம்! அவன்
வாழ்ந்தால், உண்மையில் வாழப்போவது நாம்தானே!
No comments:
Post a Comment